search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமான வரி சோதனை"

    • தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதியில் உள்ள உள்ள 60-க்கும் மேற்பட்ட கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
    • பட்டு சேலைகள் விற்பனை செய்வதில் வரி ஏய்ப்பு நடைபெற்ற உள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

    சென்னை:

    சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமத்தில், காஞ்சிபுரம் வரா மகாலட்சுமி சில்க்ஸ் உள்ளிட்ட 60 இடங்களில் நேற்று காலை முதல் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் முதன்மையாக "கலாமந்திர்", "மந்திர்", "காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ்" மற்றும் "கே.எல்.எம். பேஷன் மால்" என்ற பெயரில் பெண்களுக்கான பிரத்தியேக பட்டு புடவைகள், மற்றும் வடமாநில கலாச்சார துணி வகைகள் விற்பனை செய்து வருகின்றன.

    தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதியில் உள்ள உள்ள 60-க்கும் மேற்பட்ட கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

    காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டும், சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் கடையில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர், பாண்டி பஜார் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    துணி கடைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவன கடைகளில் உயர் ரக பட்டு புடவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து இந்த சோதனையை அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக பட்டு சேலைகள் விற்பனை செய்வதில் வரி ஏய்ப்பு நடைபெற்ற உள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமானவரித்துறை சோதனை தொடர்கிறது.

    • கடந்த 6 நாட்களாக தொடர்ச்சியாக வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
    • சென்னையில் 22 இடங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வந்தது.

    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமானவரி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரி துறை அதிகாரிகள் கடந்த 24 -ந்தேதி முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்திவந்தனர்.

    சென்னையில் 22 இடங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வந்தது. இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 6 நாட்களாக தொடர்ச்சியாக வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை இந்த சோதனை அனைத்தும் நிறைவு பெற்றது. நீலாங்கரை பகுதியில் இன்று காலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 6 நாட்களாக நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றிய விரிவான அறிக்கையை விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    • கோவை-அவினாசி சாலையில் பீளமேட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், தெலுங்கானாவில் ஐதராபாத், கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களிலும் இந்த நிறுவனம் கட்டுமான தொழிலிலும், நிலம் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.

    ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிறுவனம் கட்டுமான தொழிலை மேற்கொண்டு வருகிறது.

    ஜி ஸ்கொயர் நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்தும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, ஓசூர், ஐதராபாத், பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது.

    மேலும் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு தொடர்புடைய அண்ணா நகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மோகனுக்கு சொந்தமான அண்ணா நகர் வீட்டிலும் இன்று காலையில் இருந்தே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தி.மு.க. எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக், ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார். எனவே மோகன் எம்.எல்.ஏ. வீட்டிலும், அவரது மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையின்போது ஜி ஸ்கொயர் நிறுவனம் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரியை முறையாக செலுத்தி இருக்கிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    திருச்சி விமான நிலையம் அருகாமையில் உள்ள மொராய் சிட்டி மற்றும் திருவானைக்காவல் பகுதிகளில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வீட்டுமனைகள் விற்பனை செய்து வருகிறது.

    இந்த நிறுவனத்தின் மண்டல அலுவலகம் திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள டேப்ஸ் வணிக வளாகத்தில் உள்ள 3-வது தளத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இன்று காலை 6.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவானைக்காவல் பகுதியில் உள்ள அதன் கிளை அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.

    இங்கு பணிபுரியும் ஊழியர்கள் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.

    கோவை-அவினாசி சாலையில் பீளமேட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் கோவை எல் அண்டு பைபாஸ் சாலையில் நிலம் வாங்கி விற்பனை செய்து வருகிறது. இதுதவிர சிங்காநல்லூர், சரவணம்பட்டி பகுதிகளில் வீட்டுமனைகள் வாங்கியும் விற்பனை செய்யும் தொழிலும் ஈடுபட்டு வருகிறது.

    கோவை பீளமேட்டில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு இன்று காலை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள வருமான வரித்துறை மண்டல அலுவலகத்தில் இருந்து 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 3 கார்களில் வந்தனர்.

    அவர்கள் அலுவலகத்திற்குள் சென்ற பின்னர் அதனை மூடி விட்டு அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர்.

    மேலும் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சோதனை நடைபெற்று வருவதையொட்டி அங்கு வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவிலேயே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தெரியவரும்.

    இதற்கிடையே ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அண்ணாமலைக்கு எழுதிய கடிதத்தில் அந்த நிறுவனம் கூறி இருப்பதாவது:-

    உங்களுடைய சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் எண் 14, 3-வது மாடி, ஹாரிங்டன் அப்பார்ட் மென்ட், 98, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு சென்னை -600031-ல் இயங்கி வரும் எங்கள் நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் குறித்து நீங்கள் சில கருத்துக்களை முன் வைத்திருந்தீர்கள்.

    உங்களுக்கும், பொது மக்களுக்கும் எங்கள் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை குறித்து புரிதலை ஏற்படுத்த பல முக்கிய சட்ட ஆவணங்கள் மற்றும் வியாபார ரீதியான ஆவணங்கள் அடங்கிய இந்த விரிவான விளக்கத்தை அளிக்கிறோம்.

    ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்திய நிறுவனங்கள் சட்டம், 1956-ன் கீழ் 12 அக்டோபர் 2012-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும் எங்கள் நிறுவனம் 'ஜி ஸ்கொயர்' என்ற பெயரில் கட்டுமானத்துறையில் இயங்கி வருகின்றது.

    கடந்த பத்து வருடங்களாக முன்னணி நிறுவனங்களுக்கு இதுவரை 1000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை சிறப்பான முறையில் விற்பனை செய்துள்ளோம். இதன் மூலமாக 25 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் பாலமாக இருந்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வருமானத்திற்கு வழி செய்துள்ளோம்.

    எங்கள் நிறுவனத்தில் தற்போது நேரடியாக 1,300 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மறைமுகமாக 2,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இதன் மூலம் எங்கள் நிறுவனம் மூலம் 3,300 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்றுள்ளன. மேலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, முத்திரை வரி, பதிவு கட்டணம் மூலமாக ரூ.125 கோடியும், வரியாக ரூ. 300 கோடியும் எங்கள் நிறுவனம் செலுத்தி இருக்கிறது.

    2021-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) ஆட்சிக்கு வந்த பிறகே எங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டுவதாகவும், ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பல கட்டுக்கதைகளும், எந்த தரவுகளும் இல்லாத வதந்திகளும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. நீங்கள் வெளியிட்டுள்ள சில புள்ளி விவரங்களும் இந்த வதந்திகளின் அடிப்படையாய் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

    தாங்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, மேலும் இவற்றில் எந்த முகாந்திரமும் இல்லை. தி.மு.க. ஆட்சியமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எங்கள் நிறுவனம் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    முறையாக தணிக்கை செய்து, சட்டரீதியாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்படுவதை நாங்கள் ஒவ்வொரு முறையும் உறுதி செய்த பின்னரே எங்களின் பணிகளை தொடருகிறோம். எங்கள் நிறுவனம் எவ்விதமான ஊழல்களிலும் ஈடுபட்டதில்லை. எங்கள் நிறுவனத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.

    செய்தியாளர் சந்திப்பில் நீங்கள் வெளியிட்ட டி.எம்.கே.பைல்ஸ்-ல் எங்கள் நிறுவனமான ஜி ஸ்கொயர் குறித்து நீங்கள் குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் உண்மைக்குப் புறம்பானவை. அவதூறு பரப்பும் வகையில் கூறப்பட்டவை.

    நீங்கள் வெளியிட்ட வீடியோவில் 'ஜி ஸ்கொயரின் உரிமையாளர்கள் தி.மு.க.வின் முதல் குடும்பத்தினர் என்றும், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.38,827.70 கோடி என்றும், இது ஊழல் பணம் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள், இது பொய்யான தகவல். மேலும் இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எங்கள் நிறுவனம் தி.மு.க.வின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை என்பதை தங்களுக்கு தெளிவுப்படுத்துகின்றோம்.

    நிறுவனத்தின் வருமானமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள ரூ.38,827.70 கோடி மொத்த நிலத்தையும் நாங்களே வாங்கி வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்பட்டுத்தியிருக்கின்றது. இணையத்திலும், எங்களிடமும் உள்ள வில்லங்கச் சான்றிதழ்களின் மூலம் பல்வேறு கால கட்டங்களில் 6,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மனைகளை விற்றதை அறியமுடியும்.

    நாங்கள் வாங்கி விற்ற நிலங்களுக்கு எங்களிடம் முறையான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது எங்கள் இணையப் பக்கத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களில் 22 திட்டங்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விட்டன.

    மேலும் அதிக அளவு நிலங்களை ஒரே சமயத்தில் கையகப்படுத்தியதாகவும் அதிகமான வருமானத்தை ஈட்டியதாகவும் தவறான தகவல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

    கடந்த வருடங்களில் ஜி ஸ்கொயர் மற்றும் குழு நிறுவனங்கள் விற்ற நிலங்களின் மதிப்பையும் மொத்த சொத்து மதிப்பையும் ஒன்றாக கொள்வது தவறாகும்.

    உங்கள் செயலால் பல ஆண்டு உழைப்பால் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எங்களை அணுகவும், தேவையான விளக்கங்களை அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருப்பு பண சட்டத்தின்கீழ் ரூ.13,500 கோடிக்கும் மேல் வரிக்கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
    • ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை நிரப்பாதது குறித்து வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கடந்த 2014-2015-ம் ஆண்டு முதல் 2021-2022 வரையில் வருமான வரி சோதனை நடத்திய 5,931 சோதனை நடவடிக்கையின்போது ரூ.8,800 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு பாராளுமன்ற மக்களவையில் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணை மந்திரி பங்கஜ்சவுத்ரி, கருப்பு பண சட்டத்தின்கீழ் ரூ.13,500 கோடிக்கும் மேல் வரிக்கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. 2015-ல் சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து இதுவரை 350 வழக்குகளில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    ஏ.டி.எம்.களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ஏற்றலாமா?, வேண்டாமா? என்பது குறித்து வங்கிகளுக்கு எந்த உத்தரவும் வழங்கவில்லை என்றும் மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

    ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை நிரப்பாதது குறித்து வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. கடந்த கால பயன்பாடு, நுகர்வோர் தேவை, பருவகால போக்கு போன்றவற்றின் அடிப்படையில் ஏ.டி.எம்.களுக்கான தொகை மற்றும் மதிப்பின் தேவையை வங்கிகள் தாங்களாகவே மதிப்பீடு செய்கின்றனர் என்று நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.

    • பி.பி.சி. அலுவலகங்களில் நடந்த சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறோம் என பி.பி.சி. தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    லண்டனை மையமாகக் கொண்ட பி.பி.சி. நிறுவனம் குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவணப் படங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி முதல் மந்திரியாக இருந்தார். இந்த பின்னணியில் ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    மத்திய அரசு இந்த ஆவணப் படத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

    இதற்கிடையே டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடந்தது. நேற்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தின. இந்த சோதனையின்போது அதிகாரிகள் செல்போன்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். 2012-ம் ஆண்டின் வரவு-செலவு கணக்குகள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரி சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த 60 மணி நேர ஆய்வு பணி இன்று இரவு 10:45 மணிக்கு நிறைவடைந்தது. நாளையும் சோதனை தொடரும் என கூறப்படுகிறது. இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறோம் என பி.பி.சி. தெரிவித்துள்ளது.

    • வருமான வரித்துறையின் இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக பி.பி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரி சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    லண்டனை மையமாக கொண்ட பி.பி.சி. நிறுவனம் குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவண படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தார்.

    இந்த பின்னணியில் ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மத்திய அரசு இந்த ஆவண படத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

    இந்தநிலையில் டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடந்தது. இன்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையின்போது அதிகாரிகள் செல்போன்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். 2012ம் ஆண்டின் வரவு- செலவு கணக்குகள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வருமான வரித்துறையின் இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக பி.பி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனை காரணமாக ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி பி.பி.சி. நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. அதிகாரிகளின் கேள்விகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கு மாறும் கேட்டுக்கொண்டு உள்ளது.

    பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரி சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    • அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது.
    • குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனியில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

    வேலூர்:

    வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, விஐபி சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ட்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை.

    குடியாத்தம் சந்தைபேட்டை பகுதியில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.

    அதேபோல காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் உள்ள 100-ம் நம்பர் பீடி கம்பெனியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. வேலூர் காட்பாடியில் காலை 10 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இரவு 11 மணி வரை அதாவது 13 மணி நேரம் நீடித்தது.

    இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை போன்ற முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    குடியாத்தம் சந்தைப்பேட்டை அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது. இதேபோல குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனியில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

    • பிரதமர் மோடி சர்வாதிகாரத்தின் உச்சத்தை எட்டியிருப்பதை காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சி விளாசல்
    • காங்கிரஸ் ஏன் எப்போதும் தேசவிரோத சக்திகளுடன் நிற்கிறது? என பாஜக செய்தித் தொடர்பாளர் கேள்வி

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினார்கள். பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

    'மோடி அரசின் கீழ் பத்திரிகை சுதந்திரம் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது விமர்சன குரல்களை நெரிக்கும் வெட்கக்கேடான பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எதிர்க்கட்சிகளையும் ஊடகங்களையும் தாக்குவதற்கு மத்திய நிறுவனங்களை பயன்படுத்தினால் எந்த ஜனநாயகமும் வாழ முடியாது. இதை மக்கள் எதிர்ப்பார்கள்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி சர்வாதிகாரத்தின் உச்சத்தை எட்டியிருப்பதை வருமான வரித்துறை நடவடிக்கைகள் காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    "முதலில் பிபிசி ஆவணப்படங்களை தடை செய்தார்கள். பின்னர், அதானி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை இல்லை. இப்போது பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சோதனைகள்... இந்தியா: ஜனநாயகத்தின் தாய்?" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

    எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் பாஜக மறுத்ததுடன், பிபிசி நிறுவனம் ஊழல் நிறுவனம் என்றும் இந்தியாவிற்கு எதிராக விஷத்தை பரப்பியதாகவும் குற்றம் சாட்டியது.

    பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது:-

    இந்தியாவில் எந்த ஒரு நிறுவனம் செயல்பட்டாலும், அது ஊடகங்களுடனோ அல்லது பிற பணிகளுடனோ தொடர்புடையதாக இருந்தாலும், அது உள்ளூர் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும்.

    பிபிசி நிறுவனமானது இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட கருப்பு வரலாற்றை கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி பிபிசிக்கு தடை விதித்ததை காங்கிரசார் நினைவில் கொள்ள வேண்டும்.

    அவர்களால் ஏன் காத்திருக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் எப்போதும் தேசவிரோத சக்திகளுடன் நிற்கிறது? இந்த வருமான வரி சோதனையானது வழக்கமான நடவடிக்கைதான். அந்த நிறுவனம் பதிலளிக்காததைத் தொடர்ந்து முன்னதாகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வருமான வரி சோதனையானது சட்டத்திற்கு உட்பட்டே நடக்கிறது. எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மார்த்தாண்டத்தில் ஒரு திருமண மண்டபம், லாரி சர்வீஸ் போன்றவையும் உள்ளது. இது தவிர தேமானூர் பகுதியில் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார்.
    • களியக்காவிளை பகுதியில் உள்ள காண்டிராக்டர் ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

    குழித்துறை:

    தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்கள் சொத்துக்களை வாங்கியதில் முறைகேடு செய்திருப்பதாகவும் வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்றும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.

    அதன் அடிப்படையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள ஓட்டல் அதிபர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், செங்கல் சூளைகள் போன்றவற்றில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே கட்டமாக சோதனை நடத்தினர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜேந்திரன். இவருக்கு ஏராளமான கல் குவாரிகள் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளன.

    மேலும் மார்த்தாண்டத்தில் ஒரு திருமண மண்டபம், லாரி சர்வீஸ் போன்றவையும் உள்ளது. இது தவிர தேமானூர் பகுதியில் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார்.

    தொழில் அதிபர் ராஜேந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதுபோல களியக்காவிளை பகுதியில் உள்ள காண்டிராக்டர் ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

    இதுபோல நாகர்கோவில் பகுதியில் உள்ள ஆயுர்வேத மருந்து நிறுவனத்திலும் இன்று சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள் என 5 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இது தவிர மாவட்டத்தில் சுமார் 20 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வருமான வரித்துறை அதிகாரிகள் ஆற்றங்கரை பள்ளிவாசல் மற்றும் அரியநாயகிபுரத்தில் உள்ள கல்குவாரியில் சோதனை நடத்தினர்.
    • நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான திருமண மண்டபங்கள், கல்குவாரிகள், செங்கல் சூளைகள், 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மார்த்தாண்டத்தில் செயல்பட்டு வருகிறது.

    மேலும் நெல்லை மாவட்டம் ஆற்றங்கரை பள்ளிவாசல் மற்றும் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்திலும் இவருக்கு சொந்தமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆற்றங்கரை பள்ளிவாசல் மற்றும் அரியநாயகிபுரத்தில் உள்ள கல்குவாரியில் சோதனை நடத்தினர். இதையொட்டி குவாரிகளுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    குவாரிகளில் ஆய்வு செய்யும் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு கற்களை எடுத்து செல்வதற்கான அனுமதி சீட்டுகள் மற்றும் குவாரிகளின் உரிமங்கள் ஆகியவற்றின் ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தபோது உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    • உரிமையாளர் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் வசித்து வருகிறார்.

    வேலூர்:

    வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலாலில் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவுரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அம்பாலால் கட்டுமான நிறுவன அலுவலகத்திற்கு வந்தனர். உள்ளே சென்றதும் கதவுகளை அடைத்து விட்டு சோதனை நடத்தினர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தபோது உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. அலுவலகத்தின் வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதன் உரிமையாளர் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் வசித்து வருகிறார். அங்குள்ள அவரது வீட்டிலும் இன்று காலை வருமானத்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்தனர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினார்

    இது தொடர்பாக ஜவுரிலால் ஜெயின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் வேலூர், குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
    • சோதனை முடிவில் டாக்டர் அன்புச்செழியனுக்கு சொந்தமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி பஸ் நிலையம் அருகில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் அன்புச்செழியன், அமுதா தம்பதியினர் நடத்தி வருகின்றனர். டாக்டர் அன்புச்செழியன் மாவட்ட குடும்ப நல மருத்துவத்துறையில் இணைஇயக்குனராக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்து வருகிறார்.

    வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக மதுரை வருமானவரித்துறை துணை இயக்குனர் மைக்கேல்ஜெரால்டு, தேனி வருமானவரி அலுவலர் அம்பேத்கார் ஆகியோர் தலைமையில் 4 குழுக்கள் தனித்தனியாக பிரிந்து டாக்டர் அன்புச்செழியன் ஆஸ்பத்திரி, அவரது வீடு, மற்றும் ஏலக்காய் கடை, தனியார் கட்டுமான நிறுவனம் உள்பட 5 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    போடியில் உள்ள பிரபல ஏலக்காய் வியாபாரியான ஞானவேல் என்பவரின் அலுவலகத்தில் நடந்த சோதனை நேற்று காலை நிறைவடைந்தது. ஞானவேல் அ.ம.மு.க கட்சியில் நகர செயலாளராக இருந்து வருகிறார். மற்ற இடங்களில் சோதனை நிறைவு பெற்றாலும் டாக்டர் அன்புச்செழியன் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்தது.

    ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நர்சுகள் உள்பட அனைத்து பணியாளர்களின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டன. 3 நாட்களாக நடந்த வந்த சோதனை இன்று அதிகாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. சோதனை முடிவில் டாக்டர் அன்புச்செழியனுக்கு சொந்தமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போடியில் நடந்த இந்த தொடர் வருமான வரித்துறை சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×